புது தில்லி: மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர் கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதன்கிழமையன்று மாநிலங்களவை கூடியதும் கர்நாடகாவின் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர் கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் அவை கூடியதும், மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு தமிழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களை பெயரைக் கூறி எழுப்பி, இன்று முழுவதும் அவையில் இருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.
அவ்வாறு கூறப்பட்டவர்களில் திமுகவின் கனிமொழி மற்றும் திருச்சி சிவா, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜ் ஆகியோர் அடங்குவர்.
அவ்வாறு உத்தரவிட்ட பிறகு அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.