புது தில்லி: நாதுராம் கோட்ஸே எப்போதும் தேச பக்தர்தான் என்ற போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா பேச்சுக்கு, அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ' சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது.
இந்த சர்ச்சை தொடர்பாக தான் போட்டியிடும் மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில், தேர்தல் பிரசாரத்தில் இருந்த பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யாவிடம் வியாழனன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நாதுராமன் கோட்ஸே ஒரு தேசபக்தராக இருந்தார். இப்போதும் தேசபக்தராக இருக்கிறார். இனியும் தேசபக்தராகதான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாதுராம் கோட்ஸே எப்போதும் தேச பக்தர்தான் என்ற போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா பேச்சுக்கு, அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.நரசிம்ம ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'கோட்ஸே தொடர்பான பாஜகவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாற்றாக சாத்வி ப்ரக்யாவின் கருத்து உள்ளது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்படும். தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.