நாட்டில் உள்ள ஆளுநர்களில் இளவயது ஆளுநர் என்ற பெருமையை தெலங்கானா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை செளந்தரராஜன் (58) பெற்றுள்ளார். ஆந்திர ஆளுநர் விஷ்வ பூஷன் ஹரிசந்தன் (85), வயதில் மூத்த ஆளுநராக உள்ளார்.
பொதுவாக ஆளுநராக நியமிக்கப்படுபவர்களின் வயது 60ஐ தாண்டியதாக இருக்கும். இந்நிலையில், 58 வயதே ஆன பாஜக தலைவர் தமிழிசையை தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த 1ஆம் தேதி மத்திய அரசு நியமித்தது. அவருடன் சேர்த்து மேலும் 4 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆளுநர்கள் குறித்து சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாட்டில் உள்ள 29 மாநிலங்களுக்கு 28 ஆளுநர்கள் உள்ளனர். அஸ்ஸாம் ஆளுநரான ஜகதீஷ் முகி (76), மிஸோரம் ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகிக்கிறார்.
இந்த 28 ஆளுநர்களில், 60 வயதுக்கும் குறைவாக இருப்பது தமிழிசை மட்டுமே. அவருக்கு அடுத்தபடியாக குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் (60) உள்ளார். வயதில் மூத்த ஆளுநர் என்ற பெருமையை ஆந்திர ஆளுநர் விஷ்வ பூஷண் ஹரிசந்தன் (85) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த மூத்த ஆளுநராக மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (84) உள்ளார்.
60-70 வயதுகளில் 7 ஆளுநர்கள் உள்ளனர். 70 80 வயதுகளில் 14 ஆளுநர்கள் உள்ளனர். 5 ஆளுநர்கள், 80 வயதைத் தாண்டியவர்களாக உள்ளனர். பெரும்பாலான ஆளுநர்களின் வயது வயது 70 முதல் 79 வயதாக உள்ளது.
இவர்களில் 19 பேர் முதல் முறையாக ஆளுநர் பதவியை வகிக்கின்றனர். 9 பேர் இதற்கு முன்னர் வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக பதவி வகித்துள்ளனர். இந்த 28 பேரில், 6 பெண் ஆளுநர்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.