காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆளும் பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், "நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
மேலும், கலால் வரியை உயர்த்தி பெட்ரோல் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கலால் வரி மட்டுமே, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.20 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.15 இருந்து வருகிறது.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 8% பேர். அதாவது, 8 கோடி மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டில் ஆட்டோ மொபைல் துறை சரிவடைந்துள்ளது. ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பல மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
விவசாயத்திலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது. நாட்டில் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தில்லியில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இங்கு அரங்கேறுகின்றன.
இதுபோன்று நாட்டில் நிலவும் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் உரிய பதில் அளிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.