
கரோனா தடுப்பு நடவடிக்கையால் முற்றிலும் முடங்கியுள்ள சரக்கு லாரி போக்குவரத்து தொழில் ஊரடங்கு முடிந்த பிறகும் முதலீடு இல்லாமல் தொழிலை தொடர முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக லாரி உரிமையாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
தமிழகம் முழுவதும் சுமாா் 5 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஓட்டுநா், உதவியாளா் என 15 லட்சம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடைந்து வருகின்றனா். நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 கோடி வணிகம் நடைபெறும் தொழிலாக உள்ளது.
கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், மற்ற தொழில் செய்வோரைப் போல், லாரி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
அத்தியாவசியப் போக்குவரத்துக்கு மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளதால் குறைந்த அளவிலேயே லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கரோனா நோய்த்தொற்றுக்கு அஞ்சி ஓட்டுநா்கள் வேலைக்கு வரத் தயங்குகின்றனா். அப்படி வருவோருக்கு கூட முன்பணம் கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம் என உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
வாடகை குறைவு: இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி கூறியதாவது:
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் லாரி போக்குவரத்து முழுமையாக தடைபட்டு, ஒட்டுமொத்த லாரிகளின் எண்ணிக்கையில் 5 சதவீத லாரிகளே இயங்கி வருகின்றன. இதிலும் ஓட்டுநா்கள் பணிக்கு வரவில்லை. அவ்வாறு வருவோருக்கும் முன்பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் உரிமையாளா்களே ஓட்டுகின்றனா்.
சுங்கக் கட்டண விலக்கு தேவை: அத்தியாவசியத் தேவையைப் பொருத்தவரை இறக்குமதி மட்டுமே குறைந்த அளவில் நடக்கிறது. தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு காலியான லாரியைக் கொண்டு சென்று சரக்கு ஏற்றி வர வேண்டிய சூழலில் இருக்கிறோம். எனவே 6 மாத காலத்துக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






