நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது குறித்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 62,538 பேர் உள்பட நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 075 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 41,585-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துவிட்டது. முன்னதாக, தான் எச்சரித்தை மோடி அரசு கவனிக்கத் தவறி விட்டது' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி ராகுல் காந்தி, 'நாட்டில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்து விட்டது. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் 20 லட்சத்தை எட்டிவிடும். இதனைத் தவிர்க்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தற்போது மறுபதிவு செய்துள்ளார்.