கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளில் 23 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் இதுபற்றி தெரிவித்ததாவது:
"கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 23 பயணிகள் கவலைக்கிடமாக உள்ளனர். 3 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். 81 பேர் குணமடைந்து வருகின்றனர்." என்றார் அவர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலி வாயிலான ஆலோசனை குறித்து அவர் பேசியதாவது:
"பல்வேறு வெள்ள மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை கேரளத்துக்கு அனுப்பியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன். அதேசமயம், நிலச்சரிவு மற்றும் கோழிக்கோடு விமான விபத்தில் மீட்புப் பணிக்கு உதவியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தேன். கேரள வெள்ளம் பற்றி மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது." என்றார் பினராயி விஜயன்.