மன்னிப்புக் கேட்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: பூஷண்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மீண்டும் கேட்டுக் கொண்ட போதிலும், தான் மன்னிப்புக் கேட்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை
மன்னிப்புக் கேட்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: பூஷண்
மன்னிப்புக் கேட்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: பூஷண்

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மீண்டும் கேட்டுக் கொண்ட போதிலும், தான் மன்னிப்புக் கேட்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறிவிட்டார்.

தான் கூறிய கருத்துகள் அனைத்தும், தான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுகள் தான் என்றும், அந்த நம்பிக்கையை தொடருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நான் ஒரு பொய்யான மன்னிப்பைக் கேட்கும்பட்சத்தில், அது எனது மனசாட்சியையும், ஒரு நிறுவனத்தையும் அவமதிப்பதாகும் என்று பிரசாந்த் பூஷண் இன்று அளித்த பதிலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனது நம்பிக்கைக்கு எதிராக நான் மன்னிப்புக் கேட்பது என்பது, நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையற்றதாகவோ இருந்தாலும் அது உண்மையல்லாத மன்னிப்பாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விசாரித்தது.

அப்போது, தனது கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறியதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இரண்டு நாள்கள் அவகாசம் வழங்கியது.

தனது வழக்குரைஞர்களுடன் கலந்தாலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்பது குறித்து முடிவு செய்வதாக பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் கூறியிருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பூஷண் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில், எந்தவொரு மன்னிப்பும் தூண்டுதலின் பேரில் கேட்கப்படக்கூடாது மற்றும் நீதிமன்றமே கூறியது போல, அது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com