புது தில்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர்நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை (டிச. 1) விசாரிக்கிறது.
மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்து அண்மையில் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி திங்கள்கிழமை (நவ.30) ஓய்வு பெற்றதால், நீதிபதி யோகேஷ் கன்னா இடம் பெற்ற ஒற்றை நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை நீதிபதி யோகேஷ் கன்னா விசாரிக்க உள்ளார்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் சிபிஐ விசாரணை நீதிமன்றத்தால் கடந்த 2017- ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதற்கு எதிரான தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுவைக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பல்வேறு எதிர்மனுக்களை தாக்கல் செய்ததால் மேல்முறையீட்டு மனு விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், கரோனா தொற்று காலத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 5- ஆம் தேதி முதல் தில்லி உயர்நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்தி, அனைத்து மனுக்களையும் அண்மையில் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
அதில், மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் சஞ்சய் ஜெயின், அரசு சிறப்பு வழக்குரைஞர் சஞ்சீவ் பண்டாரி ஆகியோரின் நியமனம் செல்லும் என்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018- இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் 2ஜி மேல்முறையீட்டு மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்காது என்றும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி தீர்ப்பளித்திருந்தார்.