
புது தில்லி: காங்கிரஸ் அரசால் கடந்த 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்கக் கோரி 94 வயது மூதாட்டி தாக்கல் செய்த மனுவை, வரும் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
நாட்டின் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. 1977-ஆம் ஆண்டு அவசரநிலை ரத்து செய்யப்பட்டது. அவசரநிலை அமலாக்கத்தை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி வீரா சரிண் என்ற மூதாட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், ‘நானும் என் கணவரும் தில்லியில் கலைக்கூடம் நடத்தி வந்தோம். நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தின்போது அதிகாரிகள் உள்ளிட்டோரின் அராஜக நடவடிக்கைகளால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். எங்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு என் கணவா் மீது சட்டவிரோதமாக வழக்கு தொடரப்பட்டது.
அவா் உயிரிழந்துவிட்டாலும், அந்த வழக்கு விசாரணைகளில் நான் தொடா்ந்து பங்கேற்றேன். வழக்கு பதியப்பட்டதால், உறவினா்கள் எங்களை ஒதுக்கிவைத்தனா். கடந்த 35 ஆண்டுகளாக என் உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கடும் துயரத்துக்கு உள்ளானேன்.
எனவே, அவசரநிலையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும், எனக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.கே.கௌல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.