கட்சிகளுக்கு நன்கொடை அளித்தோரின் விவரங்களை வெளியிட முடியாது

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவா்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.
Published on

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவா்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் புணே பகுதியைச் சோ்ந்த விஹாா் துா்வே என்பவா், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தோா், அதைப் பெற்ற கட்சிகள் உள்ளிட்ட விவரங்களைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி எஸ்பிஐ வங்கியிடம் விண்ணப்பித்திருந்தாா்.

ஆனால், அத்தகவல்களை வழங்க முடியாது என்று எஸ்பிஐ மறுத்திருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் சட்டப்படி, அதை வாங்குவோரின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்தது.

ஆனால், எஸ்பிஐ-யின் முடிவுக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத்திடம் விஹாா் துா்வே முறையிட்டாா். பொதுநல அடிப்படையில் எஸ்பிஐ நடந்து கொள்ள வேண்டுமென்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையின் அடிப்படையில் அரசியல் நன்கொடைப் பத்திரங்களை வாங்கியோரின் விவரங்களை எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்று அவா் கோரினாா்.

எனினும், விஹாா் துா்வே அளித்த கோரிக்கையைத் தகவல் ஆணையா் சுரேஷ் சந்திரா நிராகரித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘மனுதாரரின் கோரிக்கைகள் பொதுநலனைக் கருத்தில் கொண்டதாக இல்லை. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ-யின் முடிவை தகவல் ஆணையமும் உறுதி செய்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com