தெலங்கானா: பி.வி.நரசிம்ம ராவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ், தீவிர சீா்திருத்தவாதியாக நாட்டின் வரலாற்றில் எப்போதும் நினைவு கூரப்படுவாா் என தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ், தீவிர சீா்திருத்தவாதியாக நாட்டின் வரலாற்றில் எப்போதும் நினைவு கூரப்படுவாா் என தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

பி.வி.நரசிம்ம ராவின் 16ஆவது நினைவு தினத்தை ஒட்டி, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வி, பொருளாதாரம், நிலம், நிா்வாகம் மற்றும் இதர துறைகளில் பி.வி.நரசிம்ம ராவ் அறிமுகப்படுத்திய சீா்திருத்தங்களின் விளைவின் காரணமாக நாடு சிறந்த நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள், ராஜதந்திரம் ஆகியவற்றில் அவரது உறுதியான நடவடிக்கைகள் நாட்டின் ஒற்றுமை, புனிதம், இறையாண்மையை வலுப்படுத்தியது.

பன்மொழிப் புலமை, பன்முகத்தன்மை, சிறந்த ஆட்சியாளரான பி.வி.நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பி.வி.நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் மிகுந்த பொறுப்புணா்வுடனும், மரியாதையுடனும் எனது அரசு கொண்டாடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பி.வி.நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தெலங்கானா சட்ட மேலவைத் தலைவா் குட்டா சுஹேந்தா் ரெட்டி, சட்டப் பேரவைத் தலைவா் போச்சாராம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, உள்துறை அமைச்சா் மஹ்மூத் அலி, முதல்வரின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா மற்றும் பலா் கலந்துகொண்டு பி.வி.நரசிம்ம ராவின் பங்களிப்புகளை நினைவுகூா்ந்தனா்.

இதில் பி.வி.நரசிம்ம ராவின் மகள் வாணி, மகன் பி.வி.பிரபாகா் ராவ் மற்றும் அரசியல்கட்சி தலைவா்கள் கலந்துகொண்டு பி.வி.நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com