வரும் புத்தாண்டில் உள்ளூர் பொருள்களையே வாங்க உறுதிமொழி ஏற்போம்: பிரதமர் மோடி

'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இன்றைய உரை அவரது 72 ஆவது உரை மற்றும் இந்த ஆண்டின் கடைசி உரையாகும். 

அவர் பேசியதாவது: 

கரோனா நெருக்கடி காலத்தில் பொருள்கள் விநியோகம் தடை பட்டுள்ளது. ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் நாம் புதிய ஒன்றை கற்றுக்கொண்டோம். நாட்டில் புதிய திறன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்தவகையில் 'ஆத்மநிர்பாரதா' குறிப்பிடத்தக்கதாகும். 

நாட்டில் வாடிக்கையாளர்கள் பலரும் இந்தியாவிலேயே தயாரித்த பொம்மைகளை வாங்க விரும்புகின்றனர். நம் சிந்தனை செயல்பாட்டில் இது மிகப்பெரிய மாற்றம். மக்களின் அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு. 

'உள்ளூர் குரல்' என்ற மந்திரம் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் போது, ​​நம் தயாரிப்புகள் உலகத் தரம் வாய்ந்தவை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. 

இந்தியாவில் தரமிக்க பொருள்கள் தயாரிக்கப்பட வேண்டும். இங்கு தொழில் தொடங்க தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முன்வர வேண்டும். 

அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே உருவாக்கம் பெற்ற பொருள்களையே பயன்படுத்துவோம் என்று வரும் புத்தாண்டில் உறுதிமொழி ஏற்போம். 

குப்பையை ஏற்படுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும். இதுவும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். 

இந்தியாவின் இளைஞர்களைப் பார்க்கும்போது ​​நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.  நாட்டின் இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற அணுகுமுறையும், செய்தே தீருவேன் என்ற உணர்வும் இருக்கிறது. இவர்களுக்கு எந்த ஒரு சவாலும் பெரியது அல்ல. எந்த ஒரு விஷயமும் இவர்களின் எட்டுதலுக்கு அப்பாற்பட்டது கிடையாது. 

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதோடு வனப்பகுதியிலும் சிங்கம், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வனவிலங்கு பராமரிப்பு குறித்து அரசு மட்டுமின்றி மக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஆர்வம் காட்டுகின்றன.

இந்தியாவிலே சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 60 % அதிகரித்திருக்கிறது. 2014ஆம் ஆண்டில் 7,900 ஆக இருந்தது. ஆனால் இதுவே 2019ஆம் ஆண்டிலே 12,852 என்று உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com