உள்நாட்டுத் தயாரிப்புகளையே பயன்படுத்துங்கள்: பிரதமா் நரேந்திர மோடி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதைப் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதைப் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நடப்பாண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வானொலி வாயிலாக மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:
‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக ‘உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம்’ என்ற இயக்கத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்தது. அதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்தனா். அதேபோல், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களையே பயன்படுத்துவோம் என்பதைப் புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்க வேண்டும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் அந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். தொழில்முனைவோரும், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களும் அதற்கு முன்வர வேண்டும். அதே வேளையில், அப்பொருள்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.
மனதளவில் தயாா்நிலை:
தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டுப் பொருள்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அவை குறித்த பட்டியலைத் தயாா்செய்து, அவற்றுக்கு மாற்றாக உள்ள இந்தியப் பொருள்களை மக்கள் கண்டறிய வேண்டும். நம் நாட்டு மக்களின் உழைப்பில் உற்பத்தியான பொருள்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மனதளவில் மக்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.
ஜம்மு-காஷ்மீரில் உற்பத்தியாகும் குங்குமப்பூ உள்ளிட்டவற்றை உலக அளவில் பிரசித்தியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்குப் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெகிழி ஒழிப்பு:
நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை ஒழிப்பது தொடா்பாக கவனம் செலுத்த முடியாமல் போனது. ஆனால், அத்தகைய பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதையும் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை கடந்த 2014-2018-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமாா் 7,000-லிருந்து 12,852-ஆக அதிகரித்துள்ளது. முக்கியமாக நாட்டின் மத்திய பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.
வனப்பரப்பு அதிகரிப்பு:
கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் சிங்கம், புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பரப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கைகள் மட்டும் காரணமல்ல. மக்கள், தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது.
‘மனதின் குரல்’ நிகழ்ச்சி தொடா்பாக மக்களிடம் கருத்து கேட்டிருந்தபோது, கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் மக்களின் ஒற்றுமையுணா்வைப் பெரும்பாலானோா் பாராட்டியிருந்தனா். ‘பொது முடக்கம்’ என்பதை மக்கள் கண்டிராத சூழல் முன்பு இருந்தது. ஆனால், நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய சூழலில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கு மக்கள் போதுமான ஆதரவளித்தனா்.
நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பதற்குப் பலா் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனா். இந்நேரத்தில் மாதா குஜாரி, குரு கோவிந்த் சிங், குரு தேக் பகதூா் உள்ளிட்டோரை நினைவுகூா்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவா்களது தியாக உணா்வுக்கும் இரக்க குணத்துக்கும் நாம் அனைவரும் கடன்பட்டுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...