ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக தில்லி முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக எட்டு இடங்களை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக தில்லியின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகிய 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கேஜரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, கேஜரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் முன்னிலையில் பதவியேற்பதாக கூறினார் கேஜரிவால்.
தில்லி ராம் லீலா மைதானத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அழைப்பின் பேரில் ஆசிரியா்கள், மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவர் கேஜரிவால் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.