நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிராக நான்கு குற்றவாளிகளின் மறுஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில், தில்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தூக்குத்தண்டனையை காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றவும் குற்றவாளிகள் சட்டத் தீர்வுகளை 14 நாட்களுக்குள் முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங், தில்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.