சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கும், பாகிஸ்தான் கொடி அணிந்து, இந்தியக் கொடி மீது துப்பாக்கியைக் காட்டியவாறு ஒருவர் நிற்கும் புகைப்படம் அறுதப் பழசு என்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் கொடி அணிந்திருக்கும் நபர் ஒருவர், இந்தியக் கொடி மீது நின்று இந்தியக் கொடியை நோக்கி துப்பாக்கியைக் காட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. மட்டுமில்லாமல், இந்தப் புகைப்படத்திலிருக்கும் நபர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும், இந்தப் பதிவை அதிகளவில் பகிர்ந்தால் மட்டுமே புகைப்படத்திலிருக்கும் நபர் கைது செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்தப் புகைப்படத்துக்கும், அத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அது 2018 - இல் நடைபெற்ற சம்பவம் என்பதும், அந்தப் புகைப்படத்திலிருக்கும் நபர் பிகாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தப் புகைப்படம் தொடர்பாக 2018-இலேயே சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.