அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் ராஜஸ்தான் மாநிலத்தில், நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சியை ரத்துசெய்து மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு நிகழ்ச்சிகளும் தடைபட்டுள்ளன. அரசு நிகழ்ச்சிகள், திருமணம், தனியார் நிகழ்வுகள் என பல தரப்பு நிகழ்ச்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் சமூக இடைவெளியுடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ள ஆளுநர் மிஸ்ரா, சுதந்திர தின அனுசரிப்பை மக்கள் கூட்டம் கூடாமல் தங்களது இல்லங்களில் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 36878 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 26123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.