மகாராஷ்டிரத்தில் புதிதாக மேலும் 121 காவலர்களுக்கு கரோனா; 2 காவலர்கள் பலி
மகாராஷ்டிரத்தில் புதிதாக மேலும் 121 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,217ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 7,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,939 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது.