ராஜஸ்தானில் கரோனா நோயாளிகளை மகிழ்விக்கவும், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்திய உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டன.
ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தானில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட பல்வேறு மாவட்ட அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதாவது, மருத்துவமனைகளில் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளை மகிழ்விக்கவும், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்கவும், மேலும், தற்போது மற்றொரு அச்சுறுத்தலான வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கண்காணிக்கவும் ஆசிரியர்களுக்கு அந்த மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஆசிரியர்கள் இதனை ஏற்றுக்கொண்டு பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங்-யிடம் ஆசிரியர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டன. மாவட்ட அதிகாரிகளின் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் எழுத்துப்பூர்வமாக அல்லாத எந்த ஒரு உத்தரவும் செல்லாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.