ஒரே ஐஎம்இஐ எண்ணில் இயங்கி வரும் 13,500 செல்லிடப்பேசிகள்
மீரட்: ஒரு செல்லிடப்பேசியை அடையாளம் காண உதவுவது ஐஎம்இஐ எண். இந்தியாவில் ஒரே ஒரு ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு 13,500 செல்லிடப்பேசிகள் செயல்படுவதாக மீரட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சேவை மையங்களுக்கு எதிராக மோசடிப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரட் நகர காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் என் சிங் இதுபற்றி கூறுகையில், ஒரு காவலர், தான் புதிதாக வாங்கிய செல்லிடப்பேசி சரியாக செயல்படவில்லை என்பதால், அது பற்றி சைபர் கிரைம் பரிசோதனைப் பிரிவிடம் ஆய்வு செய்யுமாறு ஒப்படைத்தார்.
சைபர் பிரிவு காவல்துறையினர் நடத்திய ஆய்வில், காவலர் அளித்த செல்லிடப்பேசியின் ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு நாட்டில் சுமார் 13,500 செல்லிடப்பேசிகள் இயங்கி வருவதைக் கண்டறிந்தனர். இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக, கவனக்குறைவாக செயல்படும் செல்லிடப்பேசி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கவனக்குறைவான செயல்பாட்டை, குற்றவாளிகள் பலரும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பாதாகவும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

