மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி...

News image

கேரள பிரசாரத்தில் ராகுல் காந்தி

PTI

Updated On :31 மார்ச் 2026, 6:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டில் இழுபறி நீடித்து வருகின்றது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் திமுக தலைமை கடந்த மார்ச் 28 மாலையே அறிவித்துவிட்டது.

இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஏப்ரல் 6 பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.

ஆனால், மார்ச் 31, ஏப். 1, 3, 5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாள்கள் என்பதால் மார்ச் 30, ஏப். 2, 4, 6 ஆகிய 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

இந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக தலைமையில் போட்டியிடும் இரு தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றனர்.

பாஜகவுக்கு 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருக்கும் நிலையில், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்று தமிழகம் வருகை தரும் பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய தேர்வுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலை கண்டு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தொகுதிகளில் பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ராகுலுக்கு புகார் வந்ததாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கடந்த மார்ச் 27 ஆம் தேதி எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது:

“காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.

நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது.

பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிலர் விற்றுத்திண்பதாக ஜோதிமணி எழுப்பிய குற்றச்சாட்டு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலில் சில மாற்றங்களை மேற்கொள்ளுமாறும், தனது அனுமதியின்றி பட்டியலை வெளியிடக் கூடாது என்று ராகுல் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மீண்டும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தி அனுமதிக்காக மேலிடம் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, இன்றிரவு தில்லி திரும்பியவுடன் தமிழக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

பொன்னேரி (தனி), திருபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.