ராய்புர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடித்து இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில், பாம்புகளிடம் இருந்து பாதுகாக்க வளாகத்தைச் சுற்றி மாவட்ட நிர்வாகம் உப்புத் தூவி வருவது கடும் விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ஜோத்புர் மாவட்டத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இருக்கும் ராய்பூர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சட்டீஸ்கரின் நாகலோகம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் மட்டும் 200 வகையான விஷப் பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து சட்டீஸ்கர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் அங்குள்ள பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 16 பேர் பாம்புக் கடித்து உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரை பாம்புகளிடம் இருந்து பாதுகாக்க பெனாயிலுடன் உப்பைக் கலந்து, தனிமைப்படுத்தும் வளாகத்தில் தூவி, பாம்பிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதுபோன்ற வழிமுறைகள் பாம்புகளிடம் இருந்து தப்பிக்க உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது உயிருடன் விளையாடும் விஷயம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.