தில்லியில் சமூகப் பரவல் இல்லை என மத்திய அரசு கூறுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லியில் சமூகப் பரவல் இருப்பதாகவும், மத்திய அரசு இதனை ஆராய்ந்து அறிவிப்பு வெளியிடும் என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் முன்னதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர், தில்லியில் சமூகப் பரவல் இல்லை என மத்திய அரசு கூறுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லியில் சமூகப் பரவல் உள்ளதா? என்பது குறித்து இன்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடனான கூட்டத்தில் தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மணீஷ் சிசோடியா கூறியதாவது:
தில்லியில் சமூகப் பரவல் இல்லை என்றும் இதுகுறித்து தற்போது விவாதிக்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.
தில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தில்லியில் கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 12-13 நாள்களாக உள்ளது. இன்றைய நிலவரப்படி, ஜூன் 30 வரை 15,000 படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஜூலை 15 வரை 33,000 படுக்கைகளும், ஜூலை 31 வரை 80,000 படுக்கைகளும் தேவைப்படும்.
அதேபோன்று ஜூன் 15 நிலவரப்படி, தில்லியில் 44,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர். இதே ஜூன் 30-ல் கரோனா பாதிப்பு ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் என்றும் ஜூலை 15-ல் 2.25 லட்சமாகவும், ஜூலை 31-ல் 5.5 லட்சமாகவும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளதாகக் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, தில்லியில் 29,943 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது 17,712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனாவுக்கு 874 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 11,357 பேர் குணமடைந்துள்ளனர்.