புது தில்லி: கரோனா பாதித்து வீட்டிலேயே தனித்து வைக்கப்படுவோருக்கு அரசு சார்பில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், கரோனா பாதித்து அறிகுறி இல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவோர், அவ்வப்போது தங்களது உடல் ஏற்கும் ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிட வசதியாக அரசு சார்பில் நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர் வழங்கப்படும். கரோனாவில் இருந்து மீண்ட பிறகு அதை அரசிடம் திரும்ப வழங்கிவிட வேண்டும்.
இதையும் படிக்கலாம்.. கரோனாவால் அறிமுகமான பல்ஸ் ஆக்ஸிமீட்டர்: தேவையும் அதிகரிப்பு
தற்போது தில்லியில் கரோனா பரிசோதனை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நாள் ஒன்றுக்கு ஐந்து ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இது தற்போது நாள் ஒன்றுக்கு 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி கரோனா பரிசோதனை செய்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
சீனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு போர்களை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று, எல்லையில், மற்றொன்று சீனாவின் கரோனா தொற்றுடன். இரண்டு போரையும் நாம் ஒற்றுமையோடு எதிர்கொள்ள வேண்டும். இதில் எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் செய்யக்கூடாது என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.