

புது தில்லி: புது தில்லியில் 20 பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லியில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,054 பேராகும். இவர்களில் 4485 பேர் குணமடைந்துள்ளனர். 160 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
புது தில்லியில் ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று அறிவித்தார்.
அதில், தில்லியில் 20 பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்துக்குள் ஏறும் முன்பு பயணிகளுக்கு உடல்வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றப்படும்.
தில்லியில் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது தில்லியில் இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு மட்டுமே பணிகள் நடைபெற வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் முழு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம்,பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சந்தைகள் திறந்திருக்கும். ஆனால், கடைகளுக்கு வழங்கப்பட்ட எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகள் திறக்கப்படும்.
விளையாட்டரங்குகள் திறக்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மூடியே இருக்கும்.
இரவு 7 முதல் காலை 7 வரை அவசியமின்றி வெளியே வரத் தடை விதிக்கப்படுகிறது.
டேக்ஸி, வாடகைக் கார்களில் 2 பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.