மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பு ஊசி, உடைந்து தொடையில் இருந்தாக மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் இடையப்பட்டியை சேர்ந்த தாமரைச்செல்விக்கும், கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தெலுங்குப்பட்டியைச் சேர்ந்த பிச்சாண்டவர் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தாமரைச்செல்வி கருவுற்றுள்ளார். தாய் வீட்டில் முதல் மகப்பேறுவிற்கு வந்திருந்த தாமரைச்செல்வி கடந்த மார்ச் 9-ஆம் தேதி மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நள்ளிரவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மறுநாள் முதல் தடுப்பு ஊசி போடப்பட்டதாகவும், பின் 5 நாட்களில் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து குழந்தையின் இடது தொடைப்பகுதியில் வீக்கம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் குழந்தை தொடர்ந்து அழுது வந்துள்ளதாம். மேலும், அவ்வப்போது காய்ச்சலும் இருந்து வந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் தடுப்பு ஊசி போடப்பட்ட மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையின் தொடை வீக்கம் குறித்து செவிலியர்களிடம் குழந்தையின் பாட்டி அமிர்தவள்ளி கேட்டுள்ளார். ஆனால் அங்குள்ள செவிலியர்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை என்றும் அலட்சியப்போக்குடன் ஐஸ் கட்டி வைத்தால் சரியாகிவிடும் என்றும் கூறியதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை குழந்தையை குளிக்க வைக்கும்போது, தொடைப்பகுதி தென்பட்ட ஊசியின் பாதி பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்துள்ளார், குழந்தையின் பாட்டி அமிர்தவள்ளி. இதைக்கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற பிச்சாண்டவர் – தாமரைச்செல்வி இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்த மருத்துவர் வில்லியம் ஆண்ட்ரூஸிடம் தடுப்பு ஊசி உடைந்து குழந்தையில் தொடையில் இருந்தது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்திடவும், குழந்தையின் உடல் நிலை குறித்து முழு பரிசோதனை நடத்திடவும் புகார் அளித்துள்ளனர்.