

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கவும், எங்குமே குப்பை இல்லாத நகரமாக மாற்றுவதற்கும், பொதுமக்களிடம் இருந்து வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்க பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், சேவைக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது, வீடு வீடாக வந்து பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், குப்பைகளை சேகரித்துச் செல்ல சேவைக் கட்டணமாக, குடியிருப்புவாசிகள் மாதந்தோறும் ரூ.200-ஐ செலுத்த வேண்டும். இந்த சேவைக் கட்டணம் வரும் ஜனவரி மாதம் முதல் வசூலிக்கப்பட உள்ளது. இதை, பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி செலுத்தும் போது சேர்த்துக் கட்ட வேண்டும்.
இந்த சேவைக் கட்டண வசூலிப்புக்கு கடந்த ஜூன் மாதமே பெங்களூரு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கி, அதற்கு அரசும் அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், அப்போது அதை அமல்படுத்தவில்லை. இது அபராதக் கட்டணம் போல அல்ல. சேவைக் கட்டணமாகவே வசூலிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்தாலும், இதனை குடியிருப்புவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சியில் சுமார் 1 கோடி பேர் வசிக்கிறார்கள். அந்த வகையில் 32 லட்சம் குடியிருப்பவாசிகளிடமிருந்து இந்த கட்டணம் வசூலிக்கப்படும். அரசின் மற்றத் துறைகள் வசூலிப்பதைப் போலவே இது வெறும் சேவைக் கட்டணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தூய்மைப் பணிகளை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல், நிர்வாகப் பணிகளை மாநகராட்சி சரியாக கைகொள்ளாமல், அதற்கு சேவைக் கட்டணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.