

ரூர்கேலா: பொதுமுடக்கத்தின் போது தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்பத்தைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லாமல் மீண்டும் வாழ்வாதாரங்களைத் தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், வேலையிழந்து வேறு வழியே இல்லாமல் நடைப்பயணமாக வீடு வந்து சேர்ந்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இதைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எந்த வழியும் கிடைக்காததால், மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தை அண்டை மாநிலங்களில் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இனி சொந்த ஊரைவிட்டு வெளியே வர மாட்டோம், செத்தாலும் சொந்த ஊரில்தான் சாவோம் என்று சென்றவர்களின் வைராக்கியத்தை வறுமை தோற்கடித்துவிட்டது. ஒடிசா மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அண்டை மாநிலங்களை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
பிழைக்க வழி தேடி கையில் மூட்டை முடிச்சுகளை தலையில் சுமந்தபடி அண்டை மாநிலங்களுக்கு குடும்பத்துடன் இடம்பெயரத் தொடங்கியிருக்கிறது இந்த புலம்பெயர் தொழிலாளர் கூட்டம்.
பல மைல் தூரங்களை நடைப்பயணமாக கடந்துதான் வீடடைந்தோம். ஆனால் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ள இங்கு ஒரு சின்ன வாய்ப்புக் கூட இல்லை. எனவே கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு மீண்டும் வெளி மாநிலங்களை நோக்கிச் செல்கிறோம் என்கிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.
ஒடிசா மாநிலம் தஸ்லாதிஹி மற்றும் மொஹுல்பலி பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், கோவாவில் பணியாற்ற அந்த நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுத்த பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். ஊருக்குத் திரும்பியது முதலே எந்த வேலையும் கிடைக்காமல் இருந்தவர்கள் வேறு என்னதான் செய்ய முடியும் என்கிறார்கள் கையைவிரித்தபடி.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பதிவு செய்த குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிலும், மிகவும் பின்தங்கிய கிராம மக்களுக்கு வேலை வழங்குவது என்பது உள்ளூர் நிர்வாகத்தால் முடியாத காரியமாகிவிடுகிறது என்றும் கூறுகிறார்கள் கிராம மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.