பிகாரில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஐக்கிய ஜனதா தளக் கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.
இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வெளியிட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சி நேற்று (புதன்கிழமை) தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட நிலையில் இன்று ஐக்கிய ஜனதா தளம் தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதனை மாநிலத் தலைவரான பாஷிஸ்தா நரேன் சிங் வெளியிட்டார்.
இதில், மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் முன்னேற்றம், பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு ஒருவாரமே உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் அறிகை வெளியிட்டுள்ளது.