தமிழகத்தைச் சேர்ந்த முடி திருத்தும் கடைக்காரரிடம் உரையாடிய பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முடி திருத்தும் கடைக்காரரிடம் உரையாடினார்.
தூத்துக்குடியில் சலூன் கடை வைத்து நடத்தி வரும் பொன் மாரியப்பன் என்பவர் தனது கடையின் ஒரு பாகத்தில் நூலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் புத்தகத்தை எடுத்துப் படித்தால் அவர்களுக்கு விலையில் சலுகையும் வழங்குகிறார். இவர் குறித்த இந்த செய்தி ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி, பொன் மாறியப்பனிடம் காணொலி வாயிலாக உரையாடினார். உரையாடலின் இடையிடையே அவர் தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
இதுகுறித்து அவர், 'தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழிலைச் செய்து வரும் எனது நண்பர் பொன் மாரியப்பன் தனது கடையின் ஒரு பாகத்தில் நூலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தனது கடையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தைப் படிக்கிறார் என்றால் அவருக்கு பொன் மாரியப்பன் தள்ளுபடி அளிக்கிறார். இது ஒரு வித்தியாசமான, உத்வேகம் அளிக்கும் முயற்சி' என்று பிரதமர் பாராட்டியுள்ளார்