மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) மாலை உயிரிழந்தார்.
இதனைஅடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை 9 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ராஜாஜி மார்க்கில் இல்லத்தில் 2 மணிவரை பிரணாப் முகர்ஜியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.