ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

துறவி கேசவானந்த பாரதி மறைவு: குடியரசு துணைத் தலைவர், பிரதமர் இரங்கல்

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி (79) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 2:39 am

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி (79) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அரசியல் சட்ட தொடர்பான வழக்குகளில் இவரது வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே அடிப்படையாக மேற்கோள் காட்டப்படுகிறது.
கேரள மாநிலம், காசர்கோட்டில் உள்ள இடநீர் மடத்தில் வயதுமூப்பு தொடர்பான நோய்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.
கேரள நில சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக 1970-களில் அவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட அமர்வுகளில் இதுவே அதிகபட்ச நீதிபதிகளைக் கொண்ட அமர்வாகும்.
1972 அக்டோபர் 31-இல் தொடங்கிய விசாரணை 1973 மார்ச் 23-இல் நிறைவு பெற்றது. மொத்தம் 68 நாள்கள் விசாரணை நடைபெற்றது.
இந்தத் தீர்ப்பு குறித்து நீதிபதி சந்துரு கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஆனால் அடிப்படையை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது மிகவும் முக்கியமானது என்றார்.
அதன் பின்னர், பல வழக்குகளில் இந்த வழக்கின் தீர்ப்பே மேற்கோள் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிசங்கரரின் முதல் சீடர்களில் ஒருவரான தோடகாசார்யரால் கேரள மாநிலம், காசர்கோட்டில் நிறுவப்பட்டது இடநீர் சங்கர மடமாகும். சுமார் 1,200 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக கேசவானந்த பாரதி இருந்துவந்தார்.
குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் இரங்கல்: ஆன்மிகத் தலைவர்களில் மிகவும் முக்கியமான ஒருவரை இழந்துள்ளோம். அவரது வாழ்க்கை இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கும் என குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சமூக சேவை, தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக அவரை நாம் என்றும் நினைவுகூர்வோம். இந்தியாவின் வளமான கலாசாரத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவர் ஆழமாக நேசித்தார் என்று சுட்டுரையில் பிரதமர் மோடி  குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.