கரோனா புரட்டிப்போட்ட வாழ்க்கை: டீ மாஸ்டரான ஸ்கூல் மாஸ்டர்!

ஏராளமான இளைஞர்களை நல்ல குடிமகன்களாக மாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர், இன்று வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தேநீர் கடை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கரோனா புரட்டிப்போட்ட வாழ்க்கை: 'டீ மாஸ்டராக' மாறிய 'ஸ்கூல் மாஸ்டர்' 
கரோனா புரட்டிப்போட்ட வாழ்க்கை: 'டீ மாஸ்டராக' மாறிய 'ஸ்கூல் மாஸ்டர்' 
Updated on
1 min read


கர்னூல்: எண்ணற்ற இளைஞர்களை நல்ல குடிமக்களாக மாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர், இன்று தம் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தேநீர்க் கடை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் பணியாற்றிய தனியார் பள்ளி, இவருடைய வழிகாட்டுதலில், இந்தப் பகுதியிலேயே தரம் வாய்ந்த பள்ளி என்ற பெயரைப் பெற்றது.

பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும், பெற்றோரால் சிறந்த ஆசிரியர்கள் என்ற பெயரைப் பெற்றனர். ஆனால், இன்று எஸ். வேணுகோபால் என்ற இந்தத் தலைமையாசிரியர், தனது குடும்பத்தைக் காப்பாற்ற சிறிய தேநீர்க் கடையை நடத்திவருகிறார்.

ஆந்திரத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த வேணுகோபால், கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்தார். பிழைக்க வேறு வழி புலப்படாததால் இன்று தேசிய நெடுஞ்சாலையோரம் தேநீர்க் கடை வைத்துள்ளார்.

பிஎஸ்சி, பிஎட் முடித்துவிட்டு 1994 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய வேணுகோபால், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். ஆனால், கரோனா பொது முடக்கத்தால் தனது பணியை இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், அப்போதும் அவர் தன்னம்பிக்கையை இழந்துவிடவில்லை.

குடும்பத்தை வழிநடத்த ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்றால், அந்த அளவுக்கு முதலிட கையில் பணமில்லை. எனவே, சிறிய முதலீட்டைப் போட்டு தேநீர்க் கடை வைத்தார். இதற்கே நண்பரிடம் இருந்து ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார் வேணுகோபால்.  தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 500 முதல் 600 வரை வருமானம் ஈட்டி தனது குடும்பத்தின் வறுமையைப் போக்கி வருகிறார்.

"பள்ளி ஆசிரியராக இருந்து தற்போது டீ மாஸ்டராக மாறியிருக்கிறேன். ஆனால் நல்ல முறையில் சம்பாதித்து  மரியாதையுடன் வாழ வழி கிடைத்ததே என்று மகிழ்ச்சியே அடைகிறேன்" என்கிறார் வேணுகோபால்.

இவரிடம் வந்து தேநீர் குடிப்பவர்களுக்கு இலவசமாக அறிவுரையும் கிடைக்கிறது. வேலை இழந்து கஷ்டப்படுபவர்களுக்கு ஏதேனும் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டுமாறு அவர் வழிகாட்டி வருகிறார். ஒரு ஆசிரியர் எங்கு இருந்தாலும் ஆசிரியப் பணியைச் செய்வார் என்பதை நிரூபித்து வருகிறார் வேணுகோபால்.

விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்போது தனக்கும் ஒரு வகுப்பறை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் வேணுகோபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com