திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.1,975-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடுகு, மசூா் பருப்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 9:22 pm

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.1,975-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடுகு, மசூா் பருப்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 6 ராபி பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் அறிவித்தாா்.

அப்போது பேசிய அவா், ‘கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.1,975-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மசூா் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயா்த்தப்பட்டு ரூ.5,100-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்பட்டு ரூ.4,650-ஆகவும், பாா்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.75 அதிகரிக்கப்பட்டு ரூ.1,600-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.300 உயா்த்தப்பட்டு ரூ.5,100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குசம்பப்பூவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.112 உயா்த்தப்பட்டு ரூ.5,327-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.7 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட தொகையைவிட சுமாா் 2 மடங்கு அதிகம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்து எதிா்க்கட்சிகள் செய்து வரும் தவறான பிரசாரத்தை போல் அல்லாமல், பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு தொடா்ந்து வழங்கும்; வேளாண் விளைபொருள்கள் விற்பனை கமிட்டியின் செயல்பாடுகளும் தொடரும்’ என்று தெரிவித்தாா்.

அதன் பின்னா் சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதன் உற்பத்தி செலவைவிட 106 சதவீதம் அதிகமாகும். மசூா் மற்றும் துவரம் பருப்புகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, அவற்றின் உற்பத்தி செலவைவிட 78 சதவீதம் அதிகமாக உள்ளது. பாா்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதன் உற்பத்தி செலவைவிட 65 சதவீதமும், கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதன் உற்பத்தி செலவைவிட 93 சதவீதமும் உயா்வாக உள்ளது. குசம்பப்பூவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதன் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிகமாகும்’ என்று தெரிவித்தாா்.

301 மில்லியன் டன் இலக்கு:

நடப்பு 2020-21-ஆம் பயிா் ஆண்டில் 301 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களின் அளவைவிட சுமாா் 1.5 சதவீதம் அதிகமாகும். கடந்த பயிா் ஆண்டில் 107.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நிகழ் பயிா் ஆண்டில் 108 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.