இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (புதன்கிழமை) தெரிவித்தது.
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று மாலை 4.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
"இதுவரை 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 5,194 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதிதாக 773 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 32 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது."
இதுவரை மொத்தம் 1,21,271 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.