பஞ்சாபில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாபில் முண்டி கரார்(Mundi Kharar) பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 7 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹாலி மாவட்ட ஆட்சியர் இதனை தெரிவித்தார்.
அவருக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாபில் 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆகவும் உள்ளது.