ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹரியாணாவில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 14 பேரில் 7 பேர் நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை கரோனாவால் பாதிக்கப்படாத குருக்ஷேத்ரா மாவட்டத்தில் முதல்முறையாக இரண்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபரிதாபாத் மற்றும் யமுனா நகரில் தலா இருவரும் கர்னலில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனா பாதிக்கப்பட்ட 26 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.