

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, கரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 முதல் ரூ. 5 லட்சம் வரையில் விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
அதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா முன்களப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜவடேகர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், 'கரோனா தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே அவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் துரதிர்ஷ்ட சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்களை தாக்குவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, சுகாதாரப் பணியாளர்களை காக்கும்பொருட்டு மத்திய அரசு இந்த அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
சிறைத் தண்டனை, அபராதம் மட்டுமின்றி சுகாதாரப் பணியாளர்களின் வாகனங்கள் அல்லது கிளினிக்குகளுக்கு சேதம் ஏற்பட்டால், சேதமடைந்த சொத்தின் மதிப்பை விட இரு மடங்கு தொகை குற்றம் சட்டப்பட்டவரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றபின் இச்சட்டம் செயல்படுத்தப்படும்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.