'இனியொரு விதி செய்வோம்' - பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, காணொலி வாயிலாக சர்வதேச பாரதி விழா நடைபெற்றது.
சர்வதேச பாரதியார் விழாவில் பிரதமர் மோடி உரை
சர்வதேச பாரதியார் விழாவில் பிரதமர் மோடி உரை

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் காணொலி வாயிலாக சர்வதேச பாரதி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, வானவில் பண்பாட்டு மைய இயக்குநர், பாரதி குறித்த ஆராய்ச்சிக்காக விருது பெறும் சீனி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடக்கத்தில் பாரதி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பாரதிக்கு புகழஞ்சலி செலுத்தினார். 

"பாரதியார் விழாவில் கலந்துகொண்டதற்கு பெருமைப் படுகிறேன். பாரதியார் யார் என்று கேட்டால் அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. அவர் ஒரு தனிப்பட்ட பணியில் மட்டும் ஈடுபடவில்லை. பன்முகத் திறமைகளை கொண்டவர். 

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகங்களைக் கொண்டவர். தனது பாடல்களின் மூலமாக மக்களிடம் எழுச்சியை ஊட்டியவர். பாரதிக்கும் வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டிருந்தார். 

அவர் வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவரது எழுத்துகள் நம் எதிர்காலத்துக்கு வழிகாட்டுகின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அவரை பின்பற்ற வேண்டும். 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே; 
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாடுகிறார் பாரதி. இளைஞர்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். பண்டைய இந்தியாவுக்கும் நவீன இந்தியாவுக்கும் இணைப்பாக செயல்பட்டார் பாரதி. பழமையையும் புதுமையையும் இணைக்க நினைத்தார். 

தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என நினைத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் முன்னேற்றத்தின் அவசியம் குறித்து தனது  பாடல்கள் மூலமாக எடுத்துரைத்தார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர வேண்டும் என எண்ணினார். சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டவர் பாரதி.

இனியொரு விதி செய்வோம்;
அதை எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்! 

என்று பாடியவர் பாரதி. அவருடைய பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும்' என்று பேசியுள்ளார். 

வானவில் பண்பாட்டு மையம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com