கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,103 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு புதிதாக 1,103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,420 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8,613 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 119 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 106 பேர். இன்றைய பாதிப்பில் 72 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,013 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,53,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.