கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய தகவலை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு புதிதாக 927 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்றைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 76 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 91 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 67 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 20,626 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி கேரளத்தில் மொத்தம் 9,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9,302 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 61 ஆக உள்ளது.