சீனாவின் வூஹான் மாகாணத்தோடு ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவில் மும்பை நகரம் கரோனா பாதிப்பில் உச்சத்தைக் கண்டுவந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக கடந்த சில நாட்களாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
நாட்டின் வணிக நகரமான மும்பையில் ஒரு பக்கம் கரோனா பாதிப்பு குறைந்து, மறுபக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது, மும்பை நகரவாசிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.
இந்த விஷயத்தில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவிக்கு முக்கியப் பங்கு உள்ளது. கடந்த எட்டு நாள்களாக தாராவியில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவதோடு, பலி எண்ணிக்கை இல்லாத பகுதியாகவும் மாறியுள்ளது.
மும்பை மாநகராட்சி ஆணையரின் இன்றைய தகவலில், நேற்றைய நிலவரப்படி, மும்பையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 24.5 நாள்களாக உயர்ந்துள்ளது. இதில் தேசிய சராசரி 16 நாள்களாகும். கரோனா பாதித்து மரணம் அடைவோரின் விகிதமும் 3% ஆகக் குறைந்து, குணமடைந்வோரின் விகிதம் 44% ஆக உயர்ந்துள்ளது.
இதுவே, தாராவியை எடுத்துக் கொண்டால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 42 நாள்களாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 3,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 94,041 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,438 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் மும்பையில் மட்டும் 52,667 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 1857 பேர் பலியாகியுள்ளனர்.