புதுவையில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வரை 202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தில்லி எய்ம்ஸ், சென்னை அரசு மருத்துவமனையில் தலா ஒருவரும் என மொத்தம் 103 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திங்கள்கிழமை மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி தவளக்குப்பம், பிள்ளையார்குப்பம், நெல்லித்தோப்பு, முத்திரையர்பாளையம், கூனிச்சம்பட்டு, திருக்கனூர், வைத்திக்குப்பம், வாழைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பெண்கள், 6 ஆண்கள் என 11 பேருக்கும், ஜிப்மர் மருத்துவர் ஒருவருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 11 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மர் மருத்துவர் ஜிப்மரிலும், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர் அங்குள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த 71 வயது முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால், இறப்பு எண்ணிக்கை தமிழகத்திடம் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 216 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.