மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 140 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகியிருப்பதாகவும் மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம்தான். அங்கு கரோனா தடுப்புப் பணியில் களத்தில் பணியாற்றி வரும் காவலர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 3,960 ஆகவும், பலி எண்ணிக்கை 46 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 2,925 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் கரோனா தடுப்புப் பணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பையும் மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு 27,236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 83,482 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 8,23,40,331 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.