கிழக்கு லடாக் பகுதியில் தரையிலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில், ராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட குடல்வால் பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு லடாக்கில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரருக்கு, குடல்வால் பிரச்னை ஏற்பட்ட போது, மோசமான வானிலை காரணமாக அவரை உடனடியாக லேஹ் பகுதிக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்கலாம்.. பாபா கா தாபா: விடியோ பதிவிட்டவர் மீது பணமோசடி புகார் அளித்த முதியவர்
நிலைமையை உணர்ந்த ராணுவ மருத்துவர்கள், உடனடியாக ராணுவத்தின் அறுவை சிகிச்சை மையத்தில் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில், ராணுவ வீரருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டிருந்த குடல்வாலை அகற்றி, சிகிச்சை அளித்தனர்.
தற்போது அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எல்லைப் பகுதியில் மிகவும் மோசமான தட்பவெப்பநிலையில், ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவின் போது, அவர்களை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு மோசமான வானிலையின் போது, இந்திய ராணுவத்தின் மருத்துவர்கள் மேற்கொண்ட மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.