புது தில்லி: நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒரே நாளில் 92 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அது 83 ஆயிரமாக உள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 49,30,236 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது 20.08 சதவீதமாகும்.
இதுவரை கரோனா பாதித்த 49 லட்சம் பேரில், 38.59 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன் மூலம் நாட்டில் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 78.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா பாதித்தவர்களில் நேற்று ஒரே நாளில் 1,054 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 1.64 சதவீதமாகும்.
நாட்டில் இதுவரை 5.83 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, திங்கள்கிழமை ஒரே நாளில் 10.73 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.