தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த 48 வயதான மணீஷ் சிசோடியாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செப்டம்பர் 14-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று (புதன்கிழமை) முதல் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது.
உடல்நிலைக் குறைபாடு காரணமாக ஆக்ஸிஜன் உதவியுடன் நிலையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிறகு துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.