உத்தரப்பிரதேசத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டியலினத்தவர்களும், உடன் ஏராளமான மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (செவ்வாய்க் கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட போதிய அவமாசம் அளிக்காமல், அவசர அவசரமாக உடலை எரிக்க காவல்துறையினர் அழுத்தம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் ஏராளமான பெண்கள் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினருக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.