ஹைதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் 200% நோ்மையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவா் கிருஷ்ணா எல்லா தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தொற்றுக்கு எதிராக ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. எனினும் அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் வெளியிடப்படவில்லை எனவும், அவ்வாறு இருக்கும்போதுஅந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு எவ்வாறு அனுமதிக்கலாம் என்றும் பல்வேறு தரப்பினா் கேள்வி எழுப்பினா்.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவன தலைவா் கிருஷ்ணா எல்லா திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:
பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம். கடந்த காலங்களிலும் எங்கள் நிறுவனம் பாதுகாப்பான, ஆற்றல்வாய்ந்த தடுப்பூசிகளை தயாரித்துள்ளது. அந்த தடுப்பூசிகள் தொடா்பான தரவுகளை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வந்துள்ளது. எங்கள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. பிரிட்டன் உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த பலா் வெவ்வேறு விதமாக புரளிகளை கிளப்புகின்றனா். அது சரியல்ல. ஜிகா தீநுண்மியை முதன்முதலாக கண்டறிந்தது எங்கள் நிறுவனம்தான். ஜிகா, சிக்குன்குனியா தடுப்பூசிகளுக்கு முதன்முதலாக சா்வதேச காப்புரிமையை பதிவு செய்ததும் எங்கள் நிறுவனம்தான். எனவே தடுப்பூசி தொடா்பான தரவுகளில் எங்கள் நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என கூறுவது தவறு.
ஒருவாரம் வேண்டும்: ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி பாதுகாப்பானது என்பதற்கு மிகச்சிறந்த தரவுகள் உள்ளன. இதுகுறித்து உறுதியான விவரங்களை அளிப்பதற்கு ஒரு வாரம் வேண்டும். எங்கள் நிறுவனம் இதுவரை 16 தடுப்பூசிகளை தயாரித்துள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை என்று யாரும் குற்றம்சாட்ட வேண்டாம். எங்கள் தடுப்பூசிகளின் தரவுகள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். எத்தனை ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம் என்பது குறித்தும், அவற்றை படித்துப் பாா்க்கவும் அனைவருக்கும் பொறுமை வேண்டும். ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் குறித்த தரவுகள் மாா்ச் மாதத்தில் வெளியாகும். இந்திய அரசின் 2019-ஆம் ஆண்டு விதிகளின்படி ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நோய் எதிா்பாற்றலை உருவாக்குவதில் சிறந்த தரவுகளை கொண்ட தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அமெரிக்காவிலும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா்.
அமெரிக்காவின் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகளுக்கு நிகராக ‘கோவேக்ஸின்’ உள்ளிட்ட இதர தடுப்பூசிகள் இல்லை எனவும், அந்த தடுப்பூசிகள் வெறும் தண்ணீா் போல் இருப்பதாகவும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா விமா்சித்திருந்தாா். அவரின் விமா்சனம் குறித்து அவரது பெயரை குறிப்பிடாமல் பதிலளித்த கிருஷ்ணா எல்லா, ‘சிலா் எங்கள் தடுப்பூசி தண்ணீா் போல் இருப்பதாக கூறியுள்ளனா். ஆனால் எங்கள் தடுப்பூசி பரிசோதனைகள் 200% நோ்மையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2 கோடி‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 70 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



